Monday, November 23, 2015

ஏக்கம்


அக்கா ..நீ
கிறுக்கி கிழிக்கும்
தாள்களை
எனக்கு கொடேன்
நான்
எழுதி படிக்கிறேன்
வீட்டை பெருக்கிய சிறுமியின்
விழியின் ஏக்கத்தில்
வெக்கித்தலை குனிந்தது
என்
ஒட்டுமொத்த கவிதைகளும் ..!!

Sunday, November 22, 2015

வீர வேங்கைகளுக்கு என் வீர வணக்கங்கள்

கார்த்திகை
கடவுள்களின் மாதமாம்
ஆம்
நாத்திகன் நானும் நம்புகிறேன் .

கல்லான கடவுள்களுக்கு
நீங்கள்
கற்பூரம் காட்டுங்கள் .
கல்லறையில் வாழும்
கடவுள்களுக்கு
நான்
கண்ணீரில் அபிஷேகம்
செய்கிறேன்.

மகாபாரதத்தில் கிருஷ்ணரும்
இராமாயணத்தில் இராமரும்
கதாநாயகர்கள்
கதைகளில் படிக்கிறோம்
கடவுள் என ஏற்கிறோம் .

எம் உயிர்காக்க
தம் உயிர் நீத்த
ஈழப்போரின் வேந்தர்களை
எங்கே நாம் நினைக்கிறோம் ?

பொன்னுக்கும் பெண்ணுக்கும்
போராடி இருந்தால் ஒருவேளை
காவியமாகி இருக்கலாம் -இவர்களின்
தியாகங்களும்.

தமிழுக்கும்
தாய் மண்ணுக்கும் என்றால்
தயக்கம் தான்
தமிழனுக்கும் .

துயில்கொள்ளும் நீங்கள்
விழித்தெழுவீர் -எம் துயர் நீக்கி
தொலைந்த உரிமை வெல்வீர் .

நன்றி கெட்டோர் மறக்கட்டும்
வீர மறவர் மட்டும் உம்மை நினைக்கட்டும் ....!


விதையாய் வீழ்ந்த உறவுகளுக்கு என வீர வணக்கங்கள் .

Sunday, November 15, 2015

அரும்புகள்


மனங்களை வருடிடும்
நந்தவனங்கள் .
மாயம் செய்திடும்
வானவில்கள் .

கடவுள் செதுக்கிய
சிற்பங்கள்
கண்சிமிட்டும்
ஓவியங்கள் .

தோகை இல்லா
வண்ண மயில்கள் .
சோகம் தீர்க்கும்
செல்லக்குயில்கள்.

துள்ளி நடந்திடும்
புள்ளி மான்கள்.
மின்னிச் சிரித்திடும்
விண்மீன்கள் .

பாலினை மிஞ்சிய
வெள்ளை மனங்கள்
பகைவருக்கும் உதவிடும்
நல்ல குணங்கள் .

அழகிய குடும்பத்தின்
ஒளி விளக்குகள்
குழந்தையென வளர்ந்திடும்
மென் அரும்புகள்

Tuesday, November 3, 2015

காதல் போதையில் நான்

காதல் போதையில் நான் --கயல்விழி
கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .

இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .

உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .

காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .

அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .

தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவிட்டன
கனவில் உன் சில்மிஷங்கள்
அத்துமீறிவிட்டனவாம் .

உன் அன்னையின் கருவறை மேல்
பொறாமைப்பட்டுக்கொள்கிறது என்
இதயம்
உன்னை எனக்கு முதல் சுமந்துவிட்டதால் ...!! !

Sunday, November 1, 2015

காணாமல் போனவர்கள் எல்லாம் கல்லறையிலா

 காணாமல் போனவர்கள் எல்லாம் கல்லறையிலா - கயல்விழி


கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்
வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .

தந்தையை தேடும் குழந்தையும்
தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .

சீதுவையில் நினைவு தூபியாம்
சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன் சொல்லுங்களேன் .?

கற்பழிக்கப்பட்டார்களா -இல்லை உடல் கருகி மண்ணில் வீழ்ந்தார்களா .?
பாழும் கிணற்றில் போட்டீர்களா -இல்லை
உடலை
பாதி அறுத்துத்திண்டீர்களா.?

துடிக்கவைத்து ரசித்தீர்களா -இல்லை
சுடு நீரில்
அவித்தீர்களா .?

எம் வினாக்களுக்கு
விடையில்லை
வேதனைகளுக்கு
முடிவில்லை .

நெஞ்சம் பிளந்திட அழுகின்றோம் -அவர்கள்
நினைவுகள் வதைத்திட துடிக்கின்றோம்
விழி நீரில் மாலை தொடுக்கின்றோம்
-எம்மவர்
மீண்டு வருவார் என்று
வாழ்கின்றோம்.

அண்ணன் தம்பியரே கேளுங்களேன்
எம் அவலத்தை உலகிற்கு எடுத்து
செல்லுங்களேன் .
-----காணாமல் போன உயிர்கள் எல்லாம்
கல்லறையில் உறங்குதென்று
சொல்லுங்களேன்.

கொடும் யுத்தத்தால் அழிந்த
உயிர்கள் போக -மிகுதி
கப்பத்தால் அழிவதை பாருங்களேன் .