Friday, October 30, 2015

மாத இறுதி


இரவு உணவு
வாங்கி வா அக்கா
தொலைபேசியில் தங்கையின்
கெஞ்சலுக்கு ம்ம்
கொட்டியவளாய்
சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தேன்
அருகில் ஒருவரும் அதையே
செய்துகொண்டிருந்தார் .
இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
நான் மாத இறுதியில்
அவர் தினமும் ...!!

Thursday, October 29, 2015

பெண் சுதந்திரம் வேண்டும்


பெண் சுதந்திரம்  வேண்டும்
அவசர அவசரமாய்
கண்விழித்து
காலை எட்டு மணிக்கே
தலைக்குளித்து
வேலைக்காரன் வைத்த
ஓட்ஸ் யும் பூஸ்டையும்
விழுங்கி விட்டு
முட்டிக்கு மேல்
தொப்புளுக்கு கீழ்
குட்டை பாவடையும்
சல்லடையாய் சட்டையும்
அணிந்து
வீதியில் செல்லுகையில்
சீண்டிப்பார்க்கும் ஆண்களிடம்
இருந்து
கலிகால கண்ணகிகள் நாங்கள்
கேட்பது
"பெண் சுதந்திரம் "

(சிலருக்கு மட்டும் )

Thursday, October 22, 2015

நவராத்திரியும் பெத்திமாவும்

நவராத்திரியும் பெத்திமாவும் --கயல்விழி
நாத்திகம் பேசாதே இன்று
நவராத்திரி பண்டிகை
பட்டையோடு பவ்வியமாய் (இது போன்ற நாட்களில் மட்டும் )
சித்தி .

கடவுளை காலைக்கடன்
முடிக்க விடுங்க
நாத்திகம் பேச மாட்டேன்
அரைத்தூக்கத்தில் நான் .

தேவார திருப்புகழ்
பின்னணியில் ஒலிக்க
எழுந்திரடி முதேவி ..
மந்திரம் பாடும் அக்கா

ஸ்நானம் செய்துகொள்
பிடித்த பினியெனும் தீரும்
பதினெட்டு வருடம் பல்லுக்கு
பற்பொடி காட்டாத பாட்டி .

குளிருது மா கொஞ்சம்
உறங்க விடேன்
போர்வைக்குள் புகுந்துக்கொண்டு
கெஞ்சி கேட்கும் தம்பி .

கோயிலுக்கு போகணும்
சீக்கிரம் சீக்கிரம்
சக்கரை பொங்கலுக்கும்
கடலை சுண்டலுக்கும்
துடிக்கும் நாவோடு தாத்தா .

கல்வியோ செல்வமோ வீரமோ
எதுவும் கிடைக்காததால்
கடவுளை சபித்தபடி என் வீட்டு
பெத்திமா.(கிளி )

Wednesday, October 21, 2015

செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து

செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து --கயல்விழி
வெண்மதியை மிஞ்சும் இவள் முகம்
வெண்பஞ்சை மிஞ்சும் இவள் மனம்
தேனின் பிறப்பிடம் இவள் மொழி
தேவதை இவள் எங்கள் கனிமொழி .

சிரிக்கும் பட்டாம்பூச்சி இவள்
தெய்வம் தந்த செல்வமிவள்
எட்டி நடக்கும் புது மலர்
பூமியில் வாழும் நட்சத்திரம் .

கன்னக்குழிகள் கூட கதை பேசும்
கண்சிமிட்டி இவள் சிரிக்கையிலே
மென் விரல்கள் கூட நடனமிடும்
கைவீசி இவள் நடக்கையிலே .

தனிமை இவளுக்கு பிடிக்காது
தங்க நகையும் கூட பிடிக்காது
மஞ்சள் வெயில் தினம் ரசிப்பாள்
காரணம்
அவளை போல் அது அழகு என்பாள் .

கடவுள் கண்ணை குத்தும் என்பாள்
கண்ணடித்தே களவு செய்வாள்
கோபமும் குறும்பும்l சோதரர்கள்
கொஞ்சலும் கெஞ்சலும் -எம்
ஆயுதங்கள் .

சித்தி மிட்டாய் வேணும் என்று
செல்லமாய் தினமும் அடம்பிடிப்பாள்
உனக்கு மட்டுமென கொடுத்தாலும்
பகிர்ந்து உண்டே அகமகிழ்வாள் .

அக்கா பெற்ற மழலை இவள் -எனக்கு ஆறுதல் தருகின்ற அன்னையிவள் .
வாழ்ந்திட வேண்டும் இவள் நூறாண்டு
வாழ்த்தி மகிழ்ந்திட வாருங்களேன் .!!

Monday, October 19, 2015

கற்பழிப்பு விருட்சங்கள் வளர்கின்றது

கற்பழிப்பு விருட்சங்கள் வளர்கின்றது - கயல்விழி
பால்குடிக்கும் சிசுவிடம்
பாவி எதை தேடினாய்
உதிரம் உறுப்புகளாகி வெறும் ஐந்தே வருடத்தில்
இருக்கும் என்று நினைத்தாயா -உன்
இச்சை போக்கும் இடமொன்று .?

பட்டாம்பூச்சி மேனிதனில்
பதிகையிலே உன் பற்கள்
நெருடவில்லையா உன்மனம்
ருசிப்பது சிறு உயிரை என்று.

சிரிக்கும் மலரின் செவ்விதழ்கள்
கதறும் நொடியில் எனும்
கரையவில்லையா கண்கெட்டவனே
உன் கல் மனது .?

பிஞ்சு விரல்கள் உன்னிடம் கெஞ்சிடும் போதினில்
நெஞ்சினில் ஈரம்
கசியவில்லையா கயவனே .?

எச்சில் வடிக்கும் நாயே
இச்சை எதற்கு மழலை மேல்
உச்சம் உனக்கென்றால்
உதவி எடு உன் கரங்களிடம் .

பச்சிளம் குழந்தைகளும்
பாலியல் பலாத்காரமும்
எழுதிக்கொண்டே இருக்கின்றோம்
இன்று வரை முடியவில்லை
முடிவும் இல்லை .

கற்பில் பெண் குழந்தை என்றால்
காவல் வேண்டும் கருவறைக்கும்
காத்துக்கொள்
கள்ளிச்செடிகள் காய்கின்றனவாம்
கற்பழிப்புகள் விருட்சம் ஆனதால் .!!

(இது 2015.9.14 அன்று உயிர் குடிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் சேயா எனும் மலரை கசக்கியவனுக்கு எழுதியது .)

Friday, October 16, 2015

இவளும் எழுதுகோலும்

இவளும் எழுதுகோலும் --கயல்விழி
இருளை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த மின்விளக்கின் அடியில்
அமைதியாய் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது
தினக்குறிப்பேடு .

உதிரம் எனும் மை தோய்ந்த சில காகித துண்டுகள்
கற்பழிக்கப்பட்ட கன்னிகளை போல
கசக்கி வீசப்பட்டிருந்தன குப்பைத்தொட்டிக்குள் .

சுவாசிக்கத் திணறிய
மின்விசிறியின் கடைசி ஆசையை சொல்ல முடியாமல் இறுகிப்போனது டக் டக் ஓசையுடன் .

அறையின் மூலையில் ஆங்காங்கே
அரண்மனை அமைத்து
அரசாட்சி செய்தது கரையான்கள் .

அழையா விருந்தாளியாய்
அடிக்கடி வந்து போனது மின்மினிகள் .

விழிகள் வேண்டிக்கொண்டது
இமைகள் இரண்டும் இன்றாவது
இணைதல்
இன்பமென்று .

எதையும் நோக்காத இவளின் உணர்வுகளுக்கு
உதிரத்தால் உயிர்கொடுத்துகொண்டிருந்தது
எழுதுகோல் .!!

அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்

அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!!