Friday, July 31, 2015

இல்லாதவற்றையே தேடுகின்றேன்

இல்லாதவற்றையே  தேடுகின்றேன்
ஆழ்மனத்தின் அமைதி .
அடிமை படுத்தாத அதிகாரி .

பசியால் வாடாத ஏழை.
பணத்தை விரும்பாத முதலாளி .

யாசகர் இல்லா தெருக்கள் .
ஏசியில் வாழாத அரசியல்வாதி .

பொய் சொல்லாத கணவன் .
புறம் பேசாத மனைவி .

விலைமாது இல்லாத நகரம் .
வியாபாரம் பேசாத திருமணம் .

கண்ணீரே இல்லாத விழிகள் -அதை
காட்டிக்கொடுக்காத முகம் .

சிரிக்க தெரிந்த இதழ் -வலி
சுமக்க முடிந்த இதயம் .

இப்படி இல்லாதவற்றையே தேடி விரிகின்றது -என்னிடம்
இல்லாத சிறகுகள் .!!

Tuesday, July 28, 2015

ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
இல்லை இல்லை
இது என் கண்ணீர் இல்லை .
உள்ளம் உடைத்து உணர்வுகள்
வெடித்ததால்
விழிகளின் வழியே உதிரம்
சொட்டுகின்றது .

யார் நீ என் உறவா .?
என் சாதியா .? என் மதமா .?
ஏன் வலிக்கின்றது எனக்கு .?

ஏனெலில்
நீ மனிதன் .

மதங்கள் உன்னை மலிவாக்கவில்லை
சாதி உன்னை நோக்கவே இல்லை .
இனம் மொழி எதுவும்
உனக்கு இடையூராகவில்லை .

நீ
இளைஞன்
என்பத்தி மூன்று வயதிலும்
எட்டு திசையையும்
எதிர்த்து நின்ற
இளைஞன் .

விஞ்ஞானி
ஆம் நீ
ஞானம் ஊட்டும் மெய் ஞானி .

வரிகள் உறுதியாய் தெரிகின்றது
வலிகள் உள்ளுக்குள் கொல்கின்றது

மறைந்து விட்டாயா நீ.!
பிரிந்து விட்டதா உன் உயிர் .!
கனக்கின்றது மனது
வெடிக்கின்றது இதயம் ..!

(மனங்களை வென்ற மனிதருக்கு என் கண்ணீர் அஞ்சலி .ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் .)

Sunday, July 26, 2015

செல்லமாய் சின்ன சின்ன கனவுகள்

செல்லமாய் சின்ன சின்ன கனவுகள்
கலைந்தோடும் மேகத்தால்
கூரை செய்து
வீசிடும் தென்றலால்
ஜன்னலிடு .

பட்டாம்பூச்சிகள்
நிறமெடுத்து
வீட்டுக்கு வர்ணங்கள்
பூசிவிடு .

தூரலின் சாரலில்
தொட்டில் செய்து
மின்னலின் ஒளி பிடித்து
வெளிச்சம் கொடு .

மலர்களின் இதழ்கள்
பறித்தெடுத்து
மெதுமையாய் பதுமைக்கு
மெத்தையிடு.

குளிர்கின்ற நிலவினை பெயர்த்தெடுத்து
வேர்கின்ற பொழுதெல்லாம்
விசிறிவிடு .

குயில்களின் குரலினை எடுத்து
வந்து
கொஞ்சிடும் புது மெட்டு
போட்டுகுடு .

குமரி நான் காணும் கனவிதென்று
இயற்கையின்
செவிகளில் உரைத்துவிடு .!!!

Friday, July 24, 2015

சிந்தித்து செயற்படுவீர்


சிந்தித்து செயற்படுவீர்
நீர் இல்லா இடத்தில் கிணறும்
நிலம் இல்லா இடத்தில் வீடும்
நிச்சயம் தருவாராம்
கூச்சல் போடுறார்.
கூட்டம் கூட்டுறார்.

மின்மினி ஒளி கிடைக்காது
மின்சாரம் தருவாராம் .
பள்ளிக்கூடமே இல்லா ஊருக்கு
இலவசகல்வி கொடுப்பாராம் .

மது ஒழிப்பு அலப்பரைகள்
மணிக்கு ஒரு மது போத்தல் .
ஓட்டுக்கு ஐநூறு
லஞ்ச ஊழல் அழிப்பாராம் .

பசப்புக்காய் மரக்கன்று
பாதையோரம் நட்டுவைப்பார்
பத்திரிகை தலைப்புகளில் தன்
முகத்தை பதிய வைப்பார் .

பலன்தரும் வனங்களை பணத்திற்காய் விற்றுடுவார் .
நீதிக்கும் விலைகொடுத்து
நிஜங்களை மறைத்திடுவார் .

பதவி ஒன்று கிடைக்கும் வரை
பணிந்து குனிந்து நடந்திடுவார் .
நினைத்தது நடந்து விட்டால்
பச்சோந்தியாய் மாறிடுவார் .

குற்றவாளி யார் என்று சுத்தவாளி சொல்லுங்கள் .
தவறெங்கே நடந்ததென்று
மனதை தட்டி கேளுங்கள் .

பட்டு பட்டும் திருந்தாமல்
துட்டுக்காய் ஓட்டு விற்றால்
படுக்க பாயும் மிஞ்சாது
பார்த்து கேட்டு செயற்படுவீர் .!!!

Thursday, July 23, 2015

வாழாவெட்டி

வாழாவெட்டி
வெட்டிகிட்டு வந்த பிறகு
வீராப்பு பேசாத .
வாழாவெட்டி ஆகிபுட்ட
வாய் மூட கத்துக்கோ .

வளர்ப்பு சரி இல்லையாம்
வையிது ஊரு சனம்
வாசப்படி மிதிக்காம
விலகுது நம்ம இனம் .

உன்ன பெத்த வயித்த நா
உலக்கையால இடிச்சிக்கணும்
பெண்ணை பெத்த பாவத்துக்கு
நாண்டுகிட்டு செத்திடனும் .

புலம்பி தள்ளுறா பெத்தவ
புரிஞ்சி கொள்ளாம பிள்ளைய .

புகுந்த இடத்தில் மாமியா
புடுங்கி எடுக்கிறா அனுதினம்
பொம்புள போல புருசனும்
பொய்கள் எல்லாம் நம்புறான்.

கட்டு கட்டா காசு கேட்டு கழுத்த பிடிச்சி தள்ளுறான்
வெட்டியாய் இருந்துகொண்டு என்னை
வீடு வீடாய் அனுப்பிறான் .

படிப்பு இல்லை என்பதனால்
பத்து பாத்திரம் தேய்த்திட்டேன்
பசியோடு நான் இருந்து
பணம் அனைத்தும் குடுத்திட்டேன் .

பொறுத்து பொறுத்து வாழ்ந்ததில்
பூமியையும் மிஞ்சிட்டேன்
புகுந்த வீடு தனை மறந்து
பிறந்த வீடு வந்திட்டேன்.

கண் கசக்கி வாழ தான் பெண் எனக்கு பிடிக்கல
இன்னுயிரை அழிக்கவும் நான்
இன்று
கோழையில்லை .

வாழாவெட்டி என்றாலும் வாழ வைப்பேன் பெண்மையை .
வாயாடி என்றாலும் வாழ்ந்து காட்டுவேன் உண்மையாய் ..!!

Tuesday, July 21, 2015

தடைகளை உடைத்து தலைமுறை காப்போம்

தடைகளை உடைத்து தலைமுறை காப்போம்
சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

உன் படிப்பிற்கும் பதவிக்கும் இது
தேவையா.?
என் நலன் விரும்பும் நண்பர்கள் .

துவண்டு விடாதே தொடர்ந்தும் போராடு
வெற்றியும் நானும் என்றும்
உன் விரல்களில் .
ஒட்டிக்கொண்டு எனக்கு உற்சாகமூட்டும் பேனா .

சித்தி....
இந்த புகைபடத்துல நீயும் அழகு .
என்னையும் இவங்க கூட சாப்பிட
கூட்டிக்கொண்டு போ .

நாளிதழ் ஒன்றில்
இன்று
பிரசுரமாகி இருந்த
துப்பரவு தொழிலாளிகளும் நானும்
உணவருத்திய புகைப்படத்தோடு
அக்காவின் மகள் .

எப்படியோ
இனி அந்த பிஞ்சு மனதில்
சாதிவெறி முளைக்காது என்ற
மகிழ்ச்சியில் நான் .!!

Friday, July 17, 2015

இனி தீர்ப்பு எங்கள் கையில்

இனி தீர்ப்பு எங்கள் கையில்
ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .

அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .

தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?

பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?

பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .

மன்னித்து விடுங்கள் அன்னையரே
மறுபடி களங்கம்
உம் கருவறைக்கு இல்லை .

இனி
காமத்தோடு பெண்ணை பார்த்தால்
அவன் கண்கள் பறிப்போம் .
கரம்கொண்டு தீண்டினால்
கழுத்தை அறுப்போம் .
கட்டியவளைத் தவிர மற்றவளை
இரத்த உறவென நினைக்க செய்வோம்
ஒருவனுக்கு ஒருத்தியே
உலக நியதிஎன
உரக்கச் சொல்வோம் ...!!
ம்ம்ம் இனி தீர்ப்பு எங்கள்
கையில் .

Wednesday, July 15, 2015

இதயம் உள்ளோர் சொல்லுங்கள் இனி எப்படி பெண் வாழ்வாள்

இதயம் உள்ளோர் சொல்லுங்கள்  இனி எப்படி பெண் வாழ்வாள்
சீதையின் தங்கையாம்
சீண்டிப் பார்கிறான் .
சினத்துக்கொள்வதே இல்லை நான்
இங்கு என்ன இராமாயணமா நடக்கின்றது
தீக்குளித்து நிருபிப்பதற்கு .!

கலியுகம் இதில் கண்ணகிக்கும்
கள்ளக்காதலி பட்டம் தான் .

உச்சி முதல் பாதம் வரை
உடையால் மூடிக்கொண்டால்
இச்சை கொண்டவர் எச்சில் வடிக்காமலா செல்வார்
இஞ்சு இஞ்சாய் அளவெடுத்து
ஏற்ற இரக்கமும் பார்த்து சொல்வார் .

தலை குனிந்து நாம் நடந்தால்
தடவி பார்க்க நினைத்திடுவார்
தலை நிமிர்ந்து நடந்துவிட்டால்
தாவணி சரிவை ரசித்திடுவார் .

சாரியில் தொப்புளும்
சட்டையில் அக்கிலும்
சுடிதாரில் பின்புறமும்
மிடியில் முன்புறமும்
கவர்ச்சி தூக்கும் என்பார்
கண்களால் கற்பழிப்பார் .

சிரித்தால் தாசி என்றும்
முறைத்தால் முறைதவரியவள் என்றும்
பட்டங்கள் பல கொடுப்பார்
இல்லை
படுக்கைக்கு வா என்றழைப்பார் .

கன்னித்திரை உடையவில்லை -எம்
கற்பில் களங்கமில்லை
இருப்பினும் விலைமாதாம்
இது தான் பெண் விதி கேளீர் .

இன்னும் உண்டு எம் வாழ்வில்
எழுதிட தான் வார்த்தை இல்லை
இதயம் உள்ளோர் சொல்லுங்கள்
எப்படி தான் பெண் வாழ்வாள்...??!

Monday, July 13, 2015

நான் வீரத் தமிழன்டா

நான் வீரத் தமிழன்டா
மண் தன் கண்ணான பொன்னென
மானம் காத்த என் அப்பனின் தாத்தன்.
மறத்தமிழன் நான் என மார்தட்டி சூழ் உரைத்த என் தாத்தன் .
பறந்து போயினர் விண்ணோடு இல்லை நீங்கள்
மடிந்து கிடப்பீர் மண்ணோடு .

பார்போற்றும் என்இனம் பகடை காயாய் போய்விட
ஆட்டிப்பார்க்க நினைகின்றாய்
அடக்கி தான் வைக்கின்றாய் .

அட மூடனே ..
புலிக்கு பிறந்தது பூனையல்ல
பாய்ந்திட கற்றுக்கொடுக்க தேவையல்ல .
பதுங்கி வாழ்வது பயந்தல்ல
பலி தீர்க்கும் நாள் இன்றல்ல .

மகாபாரத போர் இதுவல்ல
சதிக்கு இங்கு வேலையில்லை
சுதந்திர தமிழன் நான் -என்னை
துகிலுரிக்க எவனும் பிறக்க வில்லை .

இனவெறி எனக்குள் துளியும் இல்லை -என் இனமழித்தால் பகைவர் தலை கொய்யும் துணிவு உண்டு .
சாதி மதமென்றால் தவறேன்பேன்
தமிழன் நீ என்றால்
அகமகிழ்வேன் ...!!!

Sunday, July 12, 2015

நான் நவநாகரீக பெண்

நான் நவநாகரீக பெண்
பத்து மாதம் சுமப்பதா
இது உனக்கு அடுக்குமா
என் அழகென்ன ஆவது
அது உனக்கு புரியுமா.?

ஐந்து நிமிட சுகத்தினில்
ஆயுள் முழுக்க சிறைபிடிக்க
சிறகுள்ள பறவை தனை
சிறிதேனும் எண்ணாதே .

தாலி எனக்கு தேவை இல்லை .
தாயாகும் எண்ணமில்லை
பூ சூடி பொட்டு வைக்கும் பட்டிக்காடு நான் இல்லை .

கண்களுக்கு விருந்தளிக்க
கையில் கணிணி உண்டு
காலம் கழிக்க அதில் பலதுமுண்டு

மகிழ்ச்சி எனக்கு மதுவில் உண்டு
மஞ்சம் தரும் சுகமும் அதிலுண்டு
அணைத்துக்கொள்ள தினம் ஒரு தோழன் உண்டு
ஆட்டம் போட தோழிகள் உண்டு .

சுகம் தரும் இந்த சுதந்திரம்
துறந்து
தாயாக நினைப்பேனோ உன்
கருவினை சுமந்து
தந்தையாகும் தாகம் உனக்குள்
உண்டென்றால்
தாயாக மாறிடு கர்ப்பத்தை சுமந்து.!!

Saturday, July 11, 2015

என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி
அதோ வருகின்றாள்
விழி எனும் வில் சுமந்த
என் மணப்பெண் .
நொடிப்பொழுதில் என்னை வீழ்த்தும்
கொலைகாரி .

உதட்டசைவில் என்னை அடக்கும்
சர்வதிகாரி .
கொடிஇடை அசைத்து
என்னை முடமாக்கும் கொடுமைக்காரி .

சத்தம் இன்றி யுத்தம் செய்யும் தீவிரவாதி .
சிரிப்பிலே சிறைப்பிடிக்கும்
சூனியக்காரி .

மதியை மதி மயக்கும்
மாயாவி
மலர்களும் மண்டியிடும்
அவள் முன் சேயாகி .

புற்கள் சுமக்கும் அவள் பாதம்
சுகமென்று .
புழுக்கள் நினைக்கும் அவள் காலால் மரித்தால் சுவர்கமென்று.

காற்றுக்கும் காதலிக்க கற்றுகொடுப்பாள்
கடல் அலைகளையும் கவிதைகள் பாடவைப்பாள்.

கண்ணில் என்முகம் காணும்வரை
கடவுளாய் அனைவருக்கும் காட்சி தருவாள் .
காதலன் நான் அங்கே தோன்றி விட்டால்
ராட்சசி ஆகி என் உயிர் எடுப்பாள்..!!

Thursday, July 2, 2015

சுற்றும் உலகமும் சுழற்றும் மனிதனும்

சுற்றும் உலகமும் சுழற்றும் மனிதனும்
தாயை விற்று தாய்ப்பால் வாங்கி
தாகம் தீர்க்கும் காலம் இது .
சேயை இழுத்து சேலை விடுத்து
தன் ஆசை போக்கும் பூமி இது .

மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு
மானத்தை இழக்கும் மனிதம் இது
மரித்த உடலிடம் மரியாதை கேட்டு மண்டைகள்
உடைக்கும் உலகம் இது .

துப்பாக்கி முனையில் கடவுள்கள்
வாழும்
துர்பாக்கிய நிலைமை இது.
வாழுவதாய் கூறிக்கொண்டு
இறந்து விட்ட நீதி இது.

காசுக்காய் கல்வித்தாய் மௌனமாய் விலைபோகும் நேரம் இது .
காக்கியும் காவியும் கரங்கள் கோர்த்து
களவினில் மூழ்கும் நிஜம் தான்
இது .

மனிதத்தை அறுத்து மாமிசமாய் புசித்து
மிருகங்கள் நடமாடும் காடு இது
உதிர ஆற்றிலே உடைகள் கழுவி
புண்ணியம் என்கின்ற வாழ்க்கை இது .

Wednesday, July 1, 2015

நிலாப்பெண்ணும் நிஜங்களும்

நிலாப்பெண்ணும் நிஜங்களும்
மின்மினிகள் கோர்த்து மாலை செய்தேன்
வெண்மதி அவளுக்கு சூடிடவே
நான் கண்ட நங்கை
முகம் மறைத்து
தேய்பிறையாக காட்சி தந்தாள் .

மாலையிடும் வேளை வருமென்று
விண்மீன்கள் இடத்தில் சரணடைந்தேன் ..
வேதனை சற்று மிகுதியாக
தேவியை தேடி நான் பறந்தேன் .

கலைந்திடும் மேகங்கள் கூடி வந்து
கைகட்டி வேடிக்கை பார்த்ததுவே
ஆதவன் செய்த சதி இதென்று
அலைகடல் நுரைகள் விம்மியதே ..

வீசிடும் தென்றலும் விரைந்து வந்து
மலரிடம் சேதி சொல்லியதே .!
மலர்செடி சுமந்த வேர்கள் மெல்ல வினாக்கள் தொடுத்தன மண்ணிடமே.

பொறுமை காத்த பூமிமாதா
கோபத்தின் மிகுதியில் விடையளித்தாள்.
நேர்கோட்டில் பயணிக்கும் முறைசொல்லி
நிழலாகி நான் மறைத்தேன்
வெண் நிலாப்பெண்ணை .
அவள்
நெஞ்சம் கவர்ந்தவன் நேரில் வர
தஞ்சம் புகுந்திட்டாள் என் நிழல்மறைவில்.

கரைந்து அவளும் தேயவில்லை
கதிரவன் சதி செய்ய தேவையில்லை
கன்னி அவளிடம் களங்கமில்லை
சுழல்கின்ற நான்
பொய்யுரைக்க தேவையில்லை .

விளக்கம்பெற்ற வேர்கள் எல்லாம்
விளங்கிக்கொண்டது புவியியலை
வெண்ணிலா முழுமுகம்
காணவென்று
எண்ணிகழித்தன நாழிகையை ..!!!