Friday, September 18, 2015

அழகின் அழகு கவி இவளல்லவோ

அழகின் அழகு கவி  இவளல்லவோ
மின்னலை செதுக்கி சிலையென
வடித்தானோ உன்னை .!
மிளிர்கின்றதே மேனி
பொன்னென பெண்ணே ..

நட்சத்திரங்கள் பறித்து
நீலக்கடலினில் நீந்த விட்டவன்
ஆச்சரியம் கொண்டானோ -அது
அலையில்லா உன்
விழியென கண்டு .!

தேனிலும் இனியது இல்லை என்ற
தேனீக்களின் இறுமாப்பு உடைந்ததோ
தேவதை உந்தன் இதழ் தனை
சுவைத்ததால் .!

வெண்ணிலவிற்கு பால் சேர்த்து
மெல்லிய வெண் மணி செய்து
சிற்பிகள் செதுக்கிய மென் பற்கள்
சித்திரமே உன் வாயில்
சிரிப்பதுவோ .!

அந்தியில் கதிரவன்
சென்நிறமெடுத்து
அழகிற்கு வானவில்லை அதில் குழைத்து
கண்ணே உன்கன்னத்தை
செதுக்கியவன்
ரசனையில் பிரம்மனை மிஞ்சியவன் .

கறுப்பு தோகைமயில் கண்டதில்லை
பெண்ணே உன் கூந்தல் தீர்த்தது
அந்த குறை .

அரவத்தை மயக்கிடும் மகுடி இசையும்
அகிலத்தை மயக்கிடும் மூங்கிலிசையும்
வெக்கப்பட்டு நின்றது .
கொஞ்சிப்பேசும் வெண்தாமரை உன் குரலிசையின் முன் .

நடைபயிலும் கொடி நீயென வியந்த விருட்சங்கள்
வெண்சாமரம் வீசியதோ
தென்றலின் விரல்களால் .

கம்பன் காலத்தில் நீ இல்லை
போலும்
அதனால் தான் வார்த்தைகளில் அடக்கி விட்டான் பெண்அழகை .
இன்று
இருந்திருந்தால் எழுதியிருப்பான்
இவள் அழகிற்கு
இணைவைக்க எதுவுமே இல்லை
இவ்வுலகிலென .!!!!!!!

Wednesday, September 16, 2015

புனிதமான பெண்மைக்கு புத்திமதிகள் சில

புனிதமான பெண்மைக்கு புத்திமதிகள் சில
செந்தமிழுக்கு இல்லா உரிமை
வெண்மேனிக்கு
கிடைக்கும் என்றால்
செல்லாதே பெண்ணே -அங்கு
சீரழிப்பார் உன்னை .

பொட்டுக்கும் தாலிக்கும்
பொருந்தாத இடமெனில்
புறக்கணித்து விடு பெண்ணே-அங்கு
பெருமை இழப்பாய் பெண்மையின் .

விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே
அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம்.

ஆடம்பர வாழ்வை விரும்பாதே
பெண்ணே
அழிந்திட கூடும் உன் அடக்கத்தின்
சிறப்பு .

பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே
இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய்
மறக்காதே கண்ணே .

பணம் மட்டும் போதும் என்று
எண்ணாதே பெண்ணே.
பாசத்தையும் சேமித்திட
கற்றுக்கொள் கண்ணே ...!!!

Tuesday, September 15, 2015

ம்ம்ம் இதுவும் உண்மையே


ம்ம்ம் இதுவும் உண்மையே
வெளிச்சம் தேடும் விட்டில்பூச்சிகள்
அறிவதில்லை
விளக்கு தன் உயிர்குடிக்கும் எமன் என்று .

கர்ப்பம் சுமக்கும் சிலந்திக்கு புரிவதில்லை
குழந்தைகள் கண்திறக்கும் போதே
உணவாய் சுவைப்பது
அதன் உடலை என்று.

முளைவிடும் அரும்புகள் நினைப்பதில்லை
மலர்தல் தான்
தன் மரணம் என்று.

மனிதன் உணர்வதே இல்லை
மரணம் தான் வாழ்வின்
முடிவுரை என்று ..!!!

Monday, September 14, 2015

உணர்வுகளில் உருவான காதல்


உணர்வுகளில் உருவான காதல்
இமைகள் இணைய மறுக்கையில்
மயில் இறகாய் விழி வருடும் உன் ஸ்பரிசமும்

துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் சுவாசத்தின்
உஷ்ணமும்

தொலைவில் நீ இருந்தாலும்
என் நினைவில்
தினம் கிடைகின்றது உயிரே .

நிமிஷங்கள் நகர்ந்து
வருசங்கள் ஆனபோதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கின்றது
முதல் சந்திப்பின் மௌனம் .

என்னை
பித்துப்பிடிக்க வைத்து -உன் பின்னே அலையவைத்த கனங்கள்
கடந்த காலம் என்பதை மறந்துவிடுகின்றது நிகழ்காலம் .

விரல்பிடித்து நடப்பதாய் கற்பனை
செய்து
விடிந்ததை மறந்த நாட்கள் .

வேதனை மறக்கவென
என் கனவில் நீ
தலைகோதி தோள்சாய்த்த இரவுகள்

அதிசயம்
உணர்வுகளில் மட்டும் உருவான
காதல்
உயிர் வாழ்கின்றது உலகில் ...!!!

Sunday, September 13, 2015

மங்கைக்குள் காதல்

மங்கைக்குள் காதல் -கயல்விழி
நீரினை தொலைத்த மீன்களாய்
இரு இமைகளின் நடுவே துடித்துக்கொண்டிருந்தது கருவிழிகள் .

சிறைபிடிக்கப்பட்ட காற்றாய்
சிக்கித்தவித்துக்கொண்டிருந்தது
சுவாசம் .

சூரியனை தோற்கடித்து வெப்பத்தை கடனாய் வழங்கிக்கொண்டிருந்தது உடல் .

வானவில்லை பிடித்து வந்து
உடைக்காமல் உணவாக்கி
வர்ணம்தீட்டிகொண்டிருந்தது
கன்னங்கள் .

இடியின் சத்தத்தையும் மின்னலின் வேகத்தையும் மிஞ்சிவிட்டிருந்தது
இதயத்தின் லப்டப் ஒலி.

பாலைவனத்தின் வறட்சியை சிறிதாக்கி
வறண்டுகொண்டிருந்தது நாவு .

அலைகளின் ஆர்பரிப்பை தனக்குள்
அடக்கி
தவித்துக்கொண்டிருந்தது இதழ்கள் .

இவை எதுவும் அறியாது
தடம்புரண்ட ரயிலாய் தடுமாறிய மனதிற்கு
மௌனம் சொன்னது
மங்கைக்குள் காதல் ..!!!!

Friday, September 11, 2015

காதல் மழையோடு ஒரு கவிப்பயணம்

காதல் மழையோடு ஒரு கவிப்பயணம்
அங்காங்கே தொடாதே
புல்லரித்து போகின்றதே உடல்
சில்லென்ற உன் தழுவலில் .

உச்சி முதல் பாதம் வரை
உரசாதே .
உஷ்ணத்தின் பாஷைகள்
உறங்கி விடுகின்றது
நொடிப்பொழுதில் .

மோசக்காரனடா நீ .!
மொத்த முத்தம் உனக்கே
வேண்டும் என்று
கார்முகிலாகி இதழ்களை
சுவைக்கின்றாயே .!

துளி துளியாய் துள்ளி வந்து
சீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .

தடுத்திட தடுத்திட மனம் நினைக்க
தனைமறந்த கரங்கள் மட்டும்
ஏந்திக்கொள்வது உன்னை -தன்
ஏக்கம் தவிர்பதற்கோ .

சிலர் உன்னை வஞ்சிக்கின்றனர்
நாசகாரன் என்று .
பலர் உன்னை வரவேற்கின்றனர்
கொடைவள்ளல் நீ
என்று.
நான் உன்னை கொஞ்சிக்கொண்டிருக்கின்றேன்
என் கள்வன் மழை என்று.

அதிகாலையில் வந்து இம்சிக்காதே
அந்தரங்க நேரமாம் அந்திப்பொழுதில்
வந்துவிடு -உன்னை
ஆரத்தழுவி அணைத்துகொள்கின்றேன் என்னோடு .....!!!

முண்டாசு கவிஞன் பாரதி


முண்டாசு கவிஞன் பாரதி
முண்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளில்
துண்டாட பட்டவள் நான் .!

அடுப்படி அடக்கு முறைக்கு
செருப்படி கொடுத்திட துடித்த
முருக்குமீசைக்கு
தலை வணங்கும் சின்னப்பெண் நான் .!

பெண் என்றால் பொம்மையல்ல
பூமிக்கு வந்த புதுமையென
எடுத்துரைத்த
பொக்கிஷ கவிஞனின் அடிமை நான் .

ஏளனம் செய்யப்பட்டும்
எரித்திடும் வார்த்தைகள் வீசப்பட்டும் .
தளராத தமிழ் கவியின் தத்துப்பிள்ளை நான் .

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நடை
வீரம் பேசும் விரல்கள்
வியக்க வைத்த மனிதன் .

குழந்தைகள் குதுகலிக்கும்
இவன் கவிக்கு குயில்களும் வாயசைக்கும் .
மூங்கில்கள் இசைகொடுக்க
இவன் தமிழின் முன்னால்
வார்த்தைகள் நாணிக்கொள்ளும் .

எட்டயபுரம் தந்த முத்து
புரட்சியில் இவன் எங்கள் சொத்து
தேடினான் புதுமைப்பெண்ணை
நன்றி நவில்கின்றேன் அவன் கண்ட
பெண்ணாய் .!!!

Sunday, September 6, 2015

பிரபஞ்சமும் நாமும்

பிரபஞ்சமும் நாமும் --கயல்விழி
வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .

ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .

இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .

வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .

முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .

விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .

இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்
எதுவும் செய்யாத மனிதன் மற்றும்
பிதற்றிக்கொண்டு இருந்தான்
பிரபஞ்சத்தின் முடிவு இதென்று ..!!!