Friday, September 18, 2015

அழகின் அழகு கவி இவளல்லவோ

அழகின் அழகு கவி  இவளல்லவோ
மின்னலை செதுக்கி சிலையென
வடித்தானோ உன்னை .!
மிளிர்கின்றதே மேனி
பொன்னென பெண்ணே ..

நட்சத்திரங்கள் பறித்து
நீலக்கடலினில் நீந்த விட்டவன்
ஆச்சரியம் கொண்டானோ -அது
அலையில்லா உன்
விழியென கண்டு .!

தேனிலும் இனியது இல்லை என்ற
தேனீக்களின் இறுமாப்பு உடைந்ததோ
தேவதை உந்தன் இதழ் தனை
சுவைத்ததால் .!

வெண்ணிலவிற்கு பால் சேர்த்து
மெல்லிய வெண் மணி செய்து
சிற்பிகள் செதுக்கிய மென் பற்கள்
சித்திரமே உன் வாயில்
சிரிப்பதுவோ .!

அந்தியில் கதிரவன்
சென்நிறமெடுத்து
அழகிற்கு வானவில்லை அதில் குழைத்து
கண்ணே உன்கன்னத்தை
செதுக்கியவன்
ரசனையில் பிரம்மனை மிஞ்சியவன் .

கறுப்பு தோகைமயில் கண்டதில்லை
பெண்ணே உன் கூந்தல் தீர்த்தது
அந்த குறை .

அரவத்தை மயக்கிடும் மகுடி இசையும்
அகிலத்தை மயக்கிடும் மூங்கிலிசையும்
வெக்கப்பட்டு நின்றது .
கொஞ்சிப்பேசும் வெண்தாமரை உன் குரலிசையின் முன் .

நடைபயிலும் கொடி நீயென வியந்த விருட்சங்கள்
வெண்சாமரம் வீசியதோ
தென்றலின் விரல்களால் .

கம்பன் காலத்தில் நீ இல்லை
போலும்
அதனால் தான் வார்த்தைகளில் அடக்கி விட்டான் பெண்அழகை .
இன்று
இருந்திருந்தால் எழுதியிருப்பான்
இவள் அழகிற்கு
இணைவைக்க எதுவுமே இல்லை
இவ்வுலகிலென .!!!!!!!

No comments:

Post a Comment