உன் வழி நாடேன் இனி
உன் நிழல் தேடேன் நான் .
உன் குரல் கேளேன் -என்றுமே
உன் மடி சேரேன் .
வஞ்சம் வைத்தாய் என்னில் நீ
வாரி அணைத்தாய் அவளை நீ
கள்ளம் இல்லா என் காதலை
வெட்டி எறிந்தாய் வெறுப்போடு நீ .
பெண்மை என்ன பொய்மையா .?
சிரித்து நடிக்கும் பொம்மையா .?
புறந்தள்ளும் ஆண்மையை
புரிந்திட முடியா பேதையா .?
பொறுமை காப்பதும் பெண்மை தான்
புயலாய் சுழல்வதும் பெண்மை தான்
உன்னை சுமந்ததும் பெண்மை தான்
உலகையே சுமப்பதும் பெண்மைதான்.
என்னை ஏளனம் செய்வதினால்
எனக்கு ஒன்றும் துன்பமில்லை
அழகு என்ற ஒன்றைவிட
எனக்குள் எந்த குறையுமில்லை .
சுயநலம் எனக்குள் வாராது
பிறர் நலம் காப்பது மாறாது
உள்ளத்தால் உனக்கு என்றும்
நன்றி சொல்வேன் - உயிரே நீ
இன்று என்னை பிரிந்ததற்கு ..!!!
No comments:
Post a Comment